Shahul Blog

Search This Blog

Sunday, January 18, 2009

பொம்மலாட்டம்

பொம்மலாட்டம்

"இந்த மழைல அடிச்ச டக்கீலாவெல்லாம் எறங்கிடும் போலருக்கே...வேகமா நட மாதி...காங்கிரஸ்காரய்ங்க காமராஜ் ஆட்சி அமைச்ச மாதிரி இம்புட்டு மெதுவா நடந்தா என்னிக்கி போய் சேர்றது..." வேதாளம் மாதித்தனை அவசரப்படுத்தியது.... "அவய்ங்க ஆட்சி அமைக்கிறாய்ங்களோ இல்லியோ....ஒனக்கு அவய்ங்கள மாதிரியே வாயி....உள்ள சரக்கு இல்லாட்டியும் பேச்சு மட்டும் ஒண்ணும் கொறச்சல் இல்ல...." "அதான் சொன்னன் இல்ல...உள்ள ஏத்தின சரக்கெல்லாம் எறங்கிடுச்சி...இனிமே எதுனா ஏத்துனா தான் பேச முடியும்...." "எப்பிடி...தமிழ்நாட்டு காங்கிரஸ் காரய்ங்க மாதிரியா...ஓசில கெடச்சா ஒரு குவாட்டருக்கு நாலு குவாட்டருன்னு அடிச்சிட்டி நடுத்தெருவுல அசிங்கம் பண்ண மாதிரி தான் அவய்ங்க பேசிட்டு இருக்காய்ங்க...அவய்ங்கள விடு...எங்க உன் குகை..." "இந்தா வந்திடுச்சி...இது தான்...." குகையைப் பார்த்த மாதித்தனுக்கு எரிச்சலாக இருந்தது...சில உடைந்த பாத்திரங்கள்...உடைந்த பாட்டில்கள்..நசுங்கிய பியர் கேன்கள்...பாதி அடித்த சிகரெட்கள்...என்றோ சாப்பிட்டு விட்டு மீதி வைத்த பீட்ஸா.... "என்ன கருமம் இது...இதெல்லாம் ஒரு எடம்...கார்ப்பரேஷன் குப்பைத் தொட்டியே இதை விட நல்லாருக்கும்...." "அடக்கி வாசி மாதி...எலெக்ஷன் டைம்ல அவனவனுக்கு இதயத்துல தான் எடம் கெடைக்குது....அந்த எடத்துக்கு இந்த எடம் எவ்வளவோ க்ளீன்..." "அடக் கெரகம் புடிச்ச சனியனே...எங்க சுத்தினாலும் அங்கயே வர்றீயே...ஒனக்கெல்லாம் அவாள் இவாள்....அப்புறம் டவுசர் கிழிஞ்ச வேதாள்னு ஒரு கவுஜ எழுதினா தான் சரிப்படுவ போலருக்கு...மாஞ்சா நெஞ்செனல்லாம் வந்து ஒன்ன நொங்கு எடுக்குறதுக்குள்ள கதைய சொல்லு..." "என்னது மாஞ்சா நெஞ்சனா...பேரக் கேட்டாலே அதிருதுதே...." மாஞ்சா நெஞ்சனை நினைத்து தன் நெஞ்சை பிடித்துக் கொண்ட வேதாளம் கதையை தொடர ஆரம்பித்தது.... ================================ பாவைக் கூத்து....பரவைக் கூத்து...தோல் கூத்து..பொம்மலாட்டம்...மிகப்பெரிய கூத்து எது... ஆர்ப்பரிக்கும் கடலின் வேகம்...கண்ணுக்கு தெரியாத காற்றின் வேகம்...எது வேகம்...இல்லை என்கிறார்கள்...இருக்கிறது என்கிறார்கள்... ஆனால் மனம் ஆடும் கூத்து...தாம் தோம் தக்கிட தோம்...தக்கிட தக்கிட தோம்....முயலகன் மேல் நடராஜர் ஆடும் கூத்தை விட அதி வேகமாய் சுழன்றாடுகிறது... அவனவன் மனம் அவனவன் மேடை...ஆடும் வரை ஆடும்...பார்ப்பவர் யாருமில்லாவிட்டாலும் தினம் ஒரு கூத்து...இறந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம்...எந்த இயந்திரமும் இல்லாமல் எல்லாக் காலத்திற்கும் எந்த நொடியிலும் பரவும் ஜோதி...மானஸ தேவியை எரித்த ஜோதி...மேடை சாம்பலாகும் வரை எரியும் ஜோதி...ஜோதி ஜோதி ஜெக ஜோதி.....ஜோதியை அணைத்தவர் எவருமில்லை...அணைக்கப்படாதவர் எவருமில்லை...ஜோதியை கலந்து ஜோதியாய்...பிறக்கும் போதே விலங்குடன் பிறந்தவன் மனிதன்...விலங்கு வெளியில் இல்லை...உள்ளே...சில சமயங்களில் வெளிச்சம் தரும் ஜோதியாய்...பல நேரங்களில் உள்ளிருந்து எரிக்கும் ஜோதியாய்... வைஜெயந்தியின் மனம் கூத்தாடிக் கொண்டிருந்தது... ஜெய்..ஜெய்....ஏன் மீண்டும் ஜெய்...என்ன ஆயிற்று இன்று...ஏதோ புதிதாய் இத்தனை நாட்களாய் இல்லாமல்...குருமூர்த்தியா? அவருக்கு என்னவோ ஆகிவிட்டது...தினமும் நேராக பார்க்கும் ஆள் இன்றைக்கு எங்கோ பார்த்துக் கொண்டு... இல்லை வைஜெயந்தி...உண்மையை சொல்...குருமூர்த்தியால் தான் உன் மனம் ஆடுகிறதா...நீ தினமும் தான் குருமூர்த்தியை பார்க்கிறாய்...ஆனால் ஏன் இன்று... குமரன்??.... அது...அது தான் வைஜெயந்தி...உனக்கு குமரனை பிடித்திருக்கிறது...அவன் உளறல் பிடித்திருக்கிறது...வெட்கத்துடன் அவன் சிரிப்பது பிடித்திருக்கிறது... அவள் மனம் குதித்தது... ச்சீ....கெட்ட புத்தி...அவன் நல்லாருக்கான்....அதுமில்லாம கொஞ்சம் ஜெய் மாதிரியே இருக்கான் இல்ல....அதான்...வேற ஒண்ணுமில்ல.... வேற ஒண்ணுமில்லையா...நிஜமாவே?.... ம்ம்ம்....இல்ல எனக்கு ஜெய் ஞாபகமா இருக்கு....குமரன் ஜெய் மாதிரியே இருக்கான்...அதே உயரம்...அதே மாதிரி கொஞ்சம் கோணல் சிரிப்பு...அப்புறம் அதே உளறல்...ஆனா இவன் ஜெய்யை விட கொஞ்சம் கறுப்பு... அப்ப உனக்கு ஞாபகம் ஜெய் தான்னு சொல்ற... இல்லியா பின்ன.... அப்ப போய் ஜெய்யை பார்க்க வேண்டியது தான...இங்க என்ன பண்ற... இன்னும் ஆஃபிஸ் முடியலையே....நாலு மணி தான் ஆகுது...வேலை இருக்கே... அது தினம் இருக்கறது தான்...ஒனக்கு ஞாபகம் ஜெய் மேல தான்னு சொன்னா எங்க இப்ப ப்ரூவ் பண்ணு... எப்பிடி.... பெர்மிஷன் போட்டுட்டு போ...ஒனக்கு குமரன் மேல லவ்வுன்னு நான் சொல்றேன்...இல்ல ஜெய் தான்னு சொன்னா நீ தான் ப்ரூவ் பண்ணனும்... அசிங்கமா பேசாத...அந்த பையன் வயசென்ன...என் வயசென்ன...டிசம்பர் வந்தா முப்பத்தி ஓண்ணாவுது... அவன் பாப்பா மாதிரி இருக்கான்.... ஐ....வயசெல்லாம் கணக்குப் போட்டிட்டியா... மனம் எக்காளம் கொட்டியது.. மனதுடன் சண்டையிடுவது வைஜெயந்திக்கு சலிப்பாக இருந்தது....எத்தனை நாள் உன்னுடன் சண்டையிடுவது... உன் தொல்லை தாங்க முடியலை...சரி...நான் இப்பவே பெர்மிஷன் போட்டுட்டு போறேன்...நீ தப்புன்னு ப்ரூவ் பண்றேன்... மொதல்ல ப்ரூவ் பண்ணு வைஜ்...அப்புறமா பேசலாம்... ============================ வைஜெயந்தி பர்மிஷன் போட்டு விட்டு வெளியேறிய போது மணி நான்காகியிருந்தது....உதய சூரியன் உதிக்கிறதோ இல்லையோ மதுரை சூரியன் சுட்டெரிக்க தவறுவதில்லை...அது மாலையானாலும்.... மேல மாசி வீதி, கீழ மாசி வீதி, சிம்மக்கல், மீனாட்சி அம்மன் கோயில்...பெரும் கூட்டம் பெரியார் பஸ் ஸ்டாண்ட்...மீனாட்சி அம்மன் கோயிலுக்கு போகணும்னா பெரியார் பஸ் ஸ்டாண்ட்ல எறங்கு....மீனாட்சி அம்மன்...பெரியார்...இது மீனாட்சிக்கோ பெரியாருக்கோ தெரியுமா.... கோயிலுக்கு வந்தவர்கள்...உசிலம்பட்டிக்கு பஸ் எங்க மாப்ள ஏறணும்...தேடுபவர்கள்...கணக்கு மாஸ்டர் சூப்பரா இருக்காருல்ல...எங்க ஐயன் தோல உரிச்சிருவாருடி....மாப்ள...ஒரு ரவுண்டு ஏத்திக்கிட்டு அப்பறமா தங்க ரீகல் போலாம்டா...பேசிக் இன்ஸ்டின்க்ட்னு புதுசா போட்ருக்காய்ங்க...கரெக்டா இருக்கும்...தேவர் ஒயின்ஸின் நீண்ட கால கஸ்டமர்கள்...தலைவரு அரசியலுக்கு வந்தா இவய்ங்கல்லாம் தாங்க மாட்டாய்ங்க...தாயோளிங்க...ரசிகர்கள்... பாண்டியன் பஸ் பிடித்து...கூட்டத்தோடு கூட்டமாக நசுங்கி....வைஜெயந்தி பழங்காநத்தம் வீட்டை அடைந்த போது....மணி ஐந்தாகி இருந்தது.... ====================================== அப்பா...ஆஃபிஸை விட்டு சீக்கிரம் வந்தது நிம்மதியாக இருக்கிறது...பொய்யானது என்றாலும் விடுதலை...கொஞ்ச நேர விடுதலை... ஆனால்....வீட்டில் யார் இருப்பார்கள்...சுபாவுக்கு இன்னும் ஸ்கூல் முடிந்திருக்காது...வந்திருக்க மாட்டாள்....வந்தவுடன் குதிக்கப் போகிறாள்...அம்மாவை பார்த்து....அவள் குதிப்பதை பார்த்து நாளாயிற்று...சின்ன சின்ன சந்தோஷங்களை கூட கொடுக்க முடியாமல்...என்ன வாழ்க்கை.... ஜெய்....ஜெய் இருப்பான்....லவ் யூ ஜெய்...எனக்காக எல்லாவற்றையும் உதறியவன் அல்லவா நீ... ஏனோ என்றைக்கும் இல்லாமல் இன்றைக்கு மனம் புரட்டிப் போடுகிறது..நான் ஏதோ தவறு செய்கிறேன்...உறுத்தலாக இருக்கிறது....நீ தான் வழி சொல்ல வேண்டும்....உனக்கு தெரியும் ஜெய்.... வைஜெயந்தியின் மனம் அவளை விட வேகமாக நடந்தது.... ========================== வீட்டின் கதவை திறந்து....எங்கிருந்தோ வந்திருந்த ஒரு இன்லண்ட் லெட்டர்...பால் பாக்கெட்...ஏதோ ஒரு துண்டு நோட்டீஸ்....அவளுக்கு எதையும் பார்க்க நேரமில்லை....படுக்கையறைக்குள் பாய்ந்தாள்.... ஜெய் வழக்கம் போல் சிரித்துக் கொண்டிருந்தான்... "ஜெய்...ஒனக்கு ரைட் ஹாண்ட் தான...அப்புறம் என்ன சிரிக்கும் போது மட்டும் லெஃப்ட் ஹாண்ட்...." "ஐயோ வைஜ்...இதெல்லாமா கேப்பாங்க....தெரிலையே....ச்சின்ன வயசு பழக்கம்..."அவனைப் பார்த்ததும் பிடித்துப் போக வைத்தது இந்த சிரிப்பு தான்...கொஞ்சம் கோணலாக...கொஞ்சம் வெட்கத்துடன்...கலைந்த தலை...இடது கையில் நெற்றியை தாங்கி....ஒனக்கு எப்படி சொல்றதுன்னே தெரியல வைஜ் என்பது போல‌...அதே சிரிப்பு..."ஜெய்...இன்னைக்கு குமரன்னு ஒரு பையன் வந்திருந்தான்...உன்னை மாதிரியே சிரிப்பு...எனக்கு உன் ஞாபகம் வந்திருச்சி...ஒரு வேளை அவன் உனக்கு தெரிஞ்சவனா இருப்பான்னு நினைச்சேன்...ஜெய்....எனக்கு அவனை பிடிச்சிருக்குன்னு நினைக்கிறியா....இல்ல...எனக்கு தெரியல....இன்னிக்கு திங்கட் கிழமை தான...வெள்ளிக்கிழமை போட்ட பூ அதுக்குள்ள எப்படி வாடிப் போச்சி...பூக்காரன் வந்தா பூ வாங்கணும்...உண்மைய சொல்றேன்...மனசு ரொம்ப அல்லாடுது ஜெய்...ப்ளீஸ்...தப்பா எடுத்துக்க மாட்டதான...உனக்கு புரியும் ஜெய்..." எந்த பதிலும் சொல்லாமல் ஜெய் என்ற ஜெய்ஷங்கர் அமைதியாக இருந்தான்... ஃபோட்டோவில் அதே வெட்கச்சிரிப்பும் வெள்ளிக்கிழமை போட்ட மாலையுமாக....=====================சிவாஜி ரேஞ்சுக்கு ஓவர் ஆக்டிங் உடன் கதை சொல்லி வந்த வேதாளத்தை மாதித்தன் அவசரமாக கை நீட்டி தடுத்தான்... "நிறுத்து நிறுத்து...." "என்னா என்னாச்சி மாதி...நீ கடுப்பாயி என் மூஞ்சில உன் பீச்சாங்கைய வைக்கப் போறேன்னு நெனச்சேன்"... "ம்ம்க்கும்...அப்படி ஒரு நினைப்பு வேறயா ஒனக்கு....ஒம் மூஞ்சில பீச்சாங்கைய வச்சா அப்புறம் அதை ஆசிட் ஊத்தி தான் கழுவணும்..." வேதாளம் முறைத்தது... "அப்புறம் என்னாத்துக்கு தங்கப்பதக்கம் சிவாஜி மாதிரி கைய காட்டுன....""தங்கமாவது...தகரமாவது...அதெல்லாம் ஒண்ணுமில்ல...குளுரு பின்னி எடுக்குது....குளிருக்கு தேவை மது மாதும்பாய்ங்க....இங்க இருக்கறது ஓண்ணு தான்...அதனால அந்த டக்கீலாவ எடு....ஒரு ரவுண்டு அடிச்சிட்டு மீதி கதை கேக்கலாம்..." "ஹிஹிஹி....நானே தொறக்கலாம்னு இருந்தேன்...நீயே சொல்லிட்ட...." புதுசாய் பதவி கிடைத்த எம்.எல்.ஏ போல் வேதாளம் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை இளித்தவாறே பாட்டிலை திறக்க ஆரம்பித்தது...

No comments:

Post a Comment